Hindenburg சர்ச்சை: உண்மை வென்றதாககெளதம் அதானி தெரிவிப்பு

அதானி குழுமத்தின் தலைவரான தொழிலதிபர் கெளதம் அதானி, தனது குழுமத்தின் மீது அமெரிக்கக் வர்த்தக நிறுவனமொன்று சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பில் உண்மை வென்றுள்ளதாகவும், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் தனது குழுமம் தொடர்ச்சியாக பங்களிக்கும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து SIT அல்லது CBI விசாரணைக்கு உத்தரவிட எந்தவிதமான அடிப்படையும் இல்லை என்றும், மூலதனச் சந்தை ஒழுங்குபடுத்துனரான SEBI, மூன்று மாதங்களுக்குள் அதன் விசாரணையை நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.

இந்திய பிரதம நீதியரசர் D.Y. சந்திரசூட் தலைமையிலான மூவரடங்கிய உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் குழாம் அமர்விலேயே இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நிலுவையில் உள்ள விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்குமாறு இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை சபையிடம் (SEBI) நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இதன் மூலம், apples-to-airport குழுமத்திற்கு எதிராக ஒரு வருட காலமாக இடம்பெற்ற Hindenburg ஆராய்ச்சியின் கடுமையான அறிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் அதானி குழுமம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ENDS

Post Comment