‘துரு கெபகரு’ மர பாதுகாவலன் (Thuru Kepakaru) என்பது S-lon Lanka தனியார் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு திட்டமாகும். இது சூழலை உருவாக்குகின்ற தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் கலாசாரங்களை பாதுகாத்துப் பேணும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். நடுகை செய்யப்படும் அனைத்து மரக்கன்றுகளும் ஒவ்வொரு வளர்ப்பாளர்களுக்கு ஒதுக்கப்படுவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டம் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட, கெபிட்டல் மஹாராஜா குழுமத்தின் குழும பணிப்பாளர்/ பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான எஸ்.சி. வீரசேகர அவர்கள் தெரிவிக்கையில், “இத்திட்டம் தேசத்தின் எதிர்காலமாக விளங்கும் இளைஞர்களை மையமாகக் கொண்டதாகும். இயற்கையுடனும் சூழலுடனும் அதிகம் தொடர்பில்லாத பாடசாலை மாணவர்களின் தற்போதைய வாழ்க்கை முறை, பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இலத்திரனியல் சாதனங்களுடன் கழிவவதால், நாம் அவர்களை இத்திட்டத்தின் இலக்காகக் கொண்டுள்ளோம். இவ்வாறான அவர்களின் நடத்தை, எதிர்கால சந்ததியினரின் மனநிலை மற்றும் சூழலின் மீது அவர்களுக்கு இருக்க வேண்டிய அக்கறை போன்ற விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். நகர்ப்புற வாழ்க்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள இளைஞர்கள், இயற்கை மற்றும் சூழலைப் பற்றிய மிகக் குறைந்த உணர்வையே கொண்டுள்ளனர். இது சூழல் மீதான மரியாதை மற்றும் அக்கறையின்மைக்கு கடுமையாக வழிவகுக்கிறது. முந்தைய காலங்களில், குழந்தைகளுக்கு இயற்கையின் மீது அதிக ஈர்ப்பு இருந்தது. உதாரணமாக, தொட்டால் சுருங்கி (Shameplant) தாவரத்தை சிறுவர்கள் தொட்டு விளையாடுவார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் அவ்வாறான சிறுவர்கள் அரிதாகி வருகின்றனர். எனவே இத்திட்டம் அவ்வாறான விடயங்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.” என்றார்.

2021 ஆம் ஆண்டில், S-lon Lanka தனியார் நிறுவனம், News 1st உடன் கைகோர்த்து, இயற்கை, சூழல் மற்றும் உள்ளூர் கலாசாரம் போன்ற விடயங்கள் தொடர்பான பொறுப்பை வலியுறுத்துகின்ற இத்திட்டத்தைத் ஆரம்பித்து வைத்தது. இதன் மூலம் நாடு முழுவதும் மரங்கள் நடப்பட்டன. இப்பிரசாரமானது, எதிர்கால சந்ததியினருக்காக சூழலைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பொறுப்புணர்ச்சி, கடமையுணர்வு, இயற்கையின் மீது ஆர்வமுள்ளவர்களாக இருத்தல் போன்ற விடயங்களில் அவர்களுக்கு பயிற்சிகளையும் அளிக்கிறது.

பொதுவாக மரம் நடுதல் என்பது அரசியல்வாதிகள் மற்றும் பாரிய நிறுவனங்களிடையே காணப்படும் ஒரு முக்கிய வார்த்தையாக இருந்து வருகின்றது. சுப நிகழ்வொன்றின் போது மரக்கன்று ஒன்றை நடுவது இலங்கையின் கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். இருப்பினும் முந்தைய காலங்களில் மரக்கன்றுகளை நடுவதன் பின்புலத்தில் ஒரு பாரிய நோக்கமும் அர்த்தமும் இருந்து வந்தது. இப்போதெல்லாம், மரம் நடும் பிரசாரங்கள் எவ்வித அடிப்படையும் அற்ற ஒரு விடயமாகவும், ஒரு நிகழ்ச்சியின் மீது கவனத்தை ஈர்க்கக் கூடிய ஒன்றாகவும் மாத்திரம் இருந்து வருகின்றது.

அந்த வகையில் இதற்கு நேர்மாறாக, ‘துரு கெபகரு’ பிரசாரமானது மரங்களை நடுவது தொடர்பான ஆழமான அர்த்தத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மரமொன்றின் வளர்ப்பாளருக்கு மரக்கன்றின் வளர்ச்சி தொடர்பான பொறுப்புணர்வு, கடமையுணர்வு, ஆர்வத்தை ஏற்படுத்துவதன் மூலம், இயற்கையைப் பாதுகாப்பதில் இத்திட்டம் பங்களிக்கிறது. இந்தத் திட்டம் முற்றிலும் கையடக்கத் தொலைபேசி செயலி மற்றும் QR குறியீடு மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இது மரக்கன்றுகளின் வளர்ச்சியை தொலைவிலிருந்து கண்காணிக்கவும் அவ்விபரங்களை பதிவு செய்யவும் உதவுகிறது. Google Play மற்றும் App Store ஆகியவற்றில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவ முடியும்.

சூழலைப் பாதுகாப்பதிலும், நீரை பெறும் மூலாதாரங்களை பாதுகாப்பதிலும் உண்மையான அக்கறை கொண்ட ஒரு வர்த்தக நாமமாக திகழும் S-lon Lanka தனியார் நிறுவனம், பல வருடங்களாக அதன் பங்குதாரர்களுடன் இணைந்து அவ்விடயங்கள் தொடர்பான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ‘துரு கெபகரு’ பிரசாரத் திட்டத்தின் மூலம், சமய நிறுவனங்கள், பாடசாலைகள், இலங்கை சாரணர் சங்கம், இலங்கை பொலிஸார், S-lon நிறுவனத்தின் வர்த்தக பங்காளிகளுடன் இணைந்து 8,108 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *